krishreads images

Discover Best krishreads Images of World

#food #travel #sports #news #may #wednesday

"தனக்கு விருப்பமான புத்தகங்களை மற்றவருக்கு அறிமுகம் செய்வது ஒரு நல்ல வாசகனின் இயல்பான பணி. அவனால் பிடித்த புத்தகங்களை மனதில் புதைத்து வைத்துவிட்டு சும்மா இருக்க முடியாது." ~எஸ்.ராமகிருஷ்ணன்💙 உலக புத்தக தினம்📚 #sheandherbooks #krishreads #worldbookday #worldbookday2024📚🌎 #author #writinglife #peoplebookstore #booksforlifebookaddict #happybookday #happyreader #happyreadings #artofinstagram #thinkpositive #bookrecommendations #bookreadings

4/23/2024, 6:55:37 AM

25)"எண்ணம் போல் வாழ்க்கை". நம்ம என்ன நினைக்கிறோமோ அதுதான் நம்மளோட வாழ்க்கையா இருக்கு அப்படின்னு சொன்னா நம்புவீங்களா? இந்த புத்தகம் படிச்சீங்கன்னா கண்டிப்பா நம்புவீங்க. நம்ம எல்லோருமே நமக்கு எதுவெல்லாம் வேணும் அப்படிங்குறத பத்தி நிறைய யோசிக்கிறத விட, நமக்கு எதெல்லாம் வேண்டாம் அப்படிங்கறது பத்தி தான் நிறைய யோசிக்கிறோம். இதனால நமக்கு ஏதாவது கெட்டது நடந்தா எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது அப்படின்னு வருத்தப்படுறோம். நம்ம நினைக்கிறது நடக்காம இருக்கிறதுக்கு இதுதான் காரணம். வேணுங்கிறத விட்டுட்டு எதெல்லாம் வேண்டாம் அப்படிங்கறது பத்தி அதிகமா சிந்திக்கிறதுதான். உங்க வாழ்க்கைல நீங்க எதையாவது மாத்திக்கணும் அப்படின்னு நினைச்சா முதல்ல உங்களுடைய எண்ணத்தை தான் மாத்திக்கணும் அப்படின்னு சொல்றாங்க. நம்மை எதைக் குறித்து நிறைய சிந்திக்கிறோமோ எதில அதிகமா கவனம் செலுத்துகிறோமோ அதுதான் நம்மளோட வாழ்க்கையா இருக்கு. எதிர்மறையான எண்ணத்தை விட நேர்மறையான எண்ணங்களுக்கு நூறு மடங்கு சக்தி அதிகம் அப்படிங்கறது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கு. இங்கு அவங்க ரகசியம் அப்படின்னு சொல்றது இதுதான். நம்ம எண்ணங்கள் நேர்மறையானதா இருக்கணும் அதுதான் இந்த பிரபஞ்சத்தோட ரகசியம். இந்த பிரபஞ்சம் ஒரு அலாவுதீன் பூதம் மாதிரி நம்ம என்ன நினைக்கிறோமோ "உங்களது கட்டளை என் பாக்கியம்" அப்படின்னு நம்ம நினைக்கிறது நிறைவேத்தி கொடுக்கும்.இங்க ரகசியம் அப்படிங்கறது ஈர்ப்பு விதி. நம்ம என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே நமக்கு திருப்பிக் கொடுக்கிற விதி. வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலையும் வாழ்க்கைய நம்ம பார்க்கக்கூடிய கண்ணோட்டத்தையும் மாற்றக்கூடிய ஒரு புத்தகம். இந்த புத்தகம் ஆவணப்படமாகவும் வெளிவந்திருக்கு .புத்தகத்தை வாசிக்க முடியாதவங்க அந்த திரைப்படத்தையாவது பார்க்கலாம். புத்தகம் பெயர் : இரகசியம் ஆசிரியர்: ரோன்டா பைர்ன் தமிழில் : குமாரசாமி பக்கங்கள்:228 பதிப்பகம் : மஞ்சள் பப்ளிசிங் ஹவுஸ் விலை :499 #sheandherbooks #krishreads #thesecret #lifelessons #thinkpostive #postivity #tamilbooklovers #tamilbookstagram #tamilbookreviewer #tamilbookrecommendations #readeveryday #readmorebooks #postivethinking #thinkpositive #lifechange

2/9/2024, 6:29:18 AM

23)புத்தக வாசிப்பு என்ற பயணம் எனக்கு பொன்னியின் செல்வனில் இருந்து தான் தொடங்கியது. பொதுவாக தமிழ் வாசிப்பாளர்கள் அனைவருமே கல்கியின் ஏதாவது ஒரு நாவலை நிச்சயம் வாசித்திருப்பர்.எனக்கும் அப்படியே. ஒரு காலத்தில் கல்கி எழுதிய நூல்களையெல்லாம் தேடித் தேடித் வாசித்தேன்.வரலாற்றை கற்பனையோடு கலந்து கூறுவதில் கல்கிக்கு நிகர் கல்கி மட்டுமே.சில காலங்களுக்குப் பிறகு இதுபோன்ற புனைவு நூல்களை விட்டு, என்மனமானது புனைவு அல்லாத வாழ்க்கையின் எதார்த்தத்தை கூறும் நூல்களையே வாசிக்க எண்ணியது. இதுபோன்ற புனைவு நூல்களை படிக்கும் போது,புனைவிற்கும் உண்மையான வரலாற்றிற்கும் இடையேயான வேறுபாட்டை தெரிந்துக்கொண்டு இந்நூல்களை வாசிப்பதே சிறந்ததாக இருக்கும்.பார்ப்பனர்களால் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான் என்ற வரலாற்று உண்மையை மறைத்து தான் இந்த புனைவு நாவல் கல்கியால் இயற்றப்பட்டுள்ளது.இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் போது சோழ தேசத்திற்கு உள்ளேயே உலவுவது போன்ற ஒரு உணர்வை நிச்சயம் ஏற்படுத்தும். புதுவெள்ளம், சுழல்காற்று,கொலைவாள்,மணிமகுடம்,தியாக சிகரம் என்ற ஐந்து பாகங்களை கொண்டுள்ளது.பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுத்திருந்தாலும் வாசிக்கும் போது கிடைக்கும் உணர்வே தனிதான்.விருவிருப்பான கதையோட்டமும்,எளிய நடையும் கொண்ட ஒரு நாவலை படிக்க விரும்புவருக்கு நிச்சயம் இந்த நாவல் பிடிக்கும். புத்தகம் பெயர் : பொன்னியின் செல்வன் ஆசிரியர்: கல்கி பக்கங்கள்:3315 பதிப்பகம் : வானதி பதிப்பகம் விலை :800 #ponniyinselvan #kalki #adithiyakarikalan #vantheiyathevan #kundavai #vanathi #manthagini #rajarajasolan #pooguzhali #sembiyanmadevi #krishreads #sheandherbooks #tamilbooklovers #tamilbookreviewer #tamilbookrecommendations #readmore #tamilbook

1/5/2024, 1:59:57 PM

22)கம்பர் இயற்றிய கம்பராமாயணமும், சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமும் ஏன் ஒழிக்கப்பட வேண்டும்? என்ற பொருளில் நடைபெற்ற சொற்போரின் தொகுப்பு தான் இந்த நூல் .ஒழிக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் அண்ணாவும் அவருக்கு எதிர்த் தரப்பில் ரா.பி.சேது பிள்ளை ,சோமசுந்தர பாரதி போன்றோரின் கருத்துக்களை அண்ணா மறுத்துப் பேசியுள்ளார்.அறிஞர் அண்ணாவின் அரசியல் காலகட்டங்களில் பார்ப்பனிய எதிர்ப்பு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போன்றவை மிகத் தீவிரமாக இருந்தது.அண்ணா அவர்கள் ஆரியத்தை முழுவதும் புறக்கணித்தார். வால்மீகி எழுதிய ராமாயணத்திலிருந்து, கம்பர் எழுதிய கம்பராமாயணம் எவ்வாறெல்லாம் வேறுபட்டுள்ளது, எதற்காக இந்த நூல்களை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்ற காரணங்களை பட்டியலிட்டு பேசுகிறார்.ராமாயணம் என்பதே ஆரிய திராவிடப் போராட்ட கதைதான். ஆரியத்தை ஏற்றுக் கொள்ளும் தூண்டுகோலாகவும் ,தமிழினம் ஆரிய இனத்தலைவனிடம் தோற்றுவிட்டது என்ற கதையை கூறுவதற்கு தான் கம்பர் கம்பராமாயணம் எழுதினார் என்பது அண்ணாவின் கருத்து. வலிமையும் ,திறமையும் ,திவிர சிவ பக்தன் என பல்வேறு குணநலன்களை கொண்ட ராவணன் ஆரிய மங்கையைக் கண்டு காமுற்று அழிந்தான் என்பது எவ்வகையில் பொருந்தும் போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி சொற்பொழிவை அண்ணா நிகழ்த்தியுள்ளார். "கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கின்றனர் என்று கூறப்படும் பழிச்சொல்லை நாங்களறிவோம். கலையிலே தேர்ந்து, அதிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, கம்பனின் இராமாயணமும், சேக்கிழாரின் பெரியபுராணமும், கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பேரால், ஓர் அண்ணா துரையின் அனலால் அக்கலை அழிந்துவிடும் என்று கருதுவரேல் அவ்வளவு சாமான்யமானது கலையாகாது; அத்தகைய கலை இருத்தலுமாகாது என்றுரைக்க ஆசைப்படுகின்றேன். கலையைக் குலைக்கும் செயலல்ல எமது செயல். கலையிலே புரட்சி உண்டாக்க விழைகின்றோம். .தக்க காரணங்களோடு.....". என்று தீ பரவட்டும் நூலில் கூறுகிறார். அண்ணாவின் நூல்கள் என்றாலே படிப்பதற்கு மிகச் சுவையாக இருக்கும். இந்த நூலும் அவ்வாறே அமைந்துள்ளது. அண்ணா அவர்கள் அன்று ஏற்றிய தீ தான் இன்றும் சுடர் விட்டு எறிந்து கொண்டிருக்கிறது. புத்தகம் பெயர் :தீ பரவட்டும் ஆசிரியர்: அறிஞர் அண்ணா பக்கங்கள்:68 பதிப்பகம் :கௌரா பதிப்பகம் விலை :60 #sheandherbooks #krishreads #Readwithkrish #tamilbooklovers #tamilbookreviewer #theeparavatum #arigarannadurai #tamilbookrecommendations #bookreader #ravanan #bookishlove

12/25/2023, 11:28:05 AM

20)நான் கண்டு வியந்த புரட்சியாளன் 20 ஆம் நூற்றாண்டு கண்ட மிகச்சிறந்த போராளிகளில் மிகவும் முக்கியமானவர் எர்னஸ்டோ என்னும் சே குவேரா. இவரை நினைத்தால் கர்வமாக உள்ளது.இனம்,மொழி,நாடு கடந்து உலகத்திலுள்ள அடிமைத்தளத்திலுள்ள மக்களுக்காக நைந்து போன நுரையீரலுடன் (ஆஸ்துமா நோய்)போராடிய மாவீரன் சே.எல்லா தலைவர்களுமே சொந்த மக்களுக்காக சொந்த மண்ணிற்காக போராடியவர்கள் ஆனால் சே மட்டுமே அதில் விதிவிலக்கு. இதற்கு உதாரணமாக ஒரு செய்தியாளர் சே வை நோக்கி நீங்கள் அர்ஜெண்டினாவில் பிறந்தீர்கள்...பின்பு கியூபா விடுதலைக்குப் போராடீனீர்கள்....இப்போது பொவிலியாவில் போராடிக் கொண்டு இருக்கீர்கள்....எது உங்கள் தாய்நாடு????அதற்கு சே வின் பதில் அடிமைப்பட்டு இருக்கும் அனைத்து தேசமும் என் தாய்நாடே என பதிலளித்தார். சே என்பது நண்பர் அல்லது தோழர் என்ற பொருள் கொண்ட அர்ஜெண்டினா சொல்லாகும். மக்கள் இவரை சே என்று அன்புடன் அழைத்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்த புரட்சிகளை செய்தார். லத்தீன் அமெரிக்க புரட்சி (கியூபா )தான் எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக மாற்றியது. கியூபாவின் வளர்ச்சியில் இரண்டு பெரிய சக்திகள் உள்ளன ஒன்று பிடல் காஸ்ட்ரோ மற்றொன்று சேகுவேரா. காஸ்ட்ரோவுக்கு கியூபா தன் சொந்த நாடு போராடும் பண்பு இயல்பானது. ஆனால் சே'வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தின் விடுதலைக்காக தன் உயிரையும் பணயம் வைத்து ஆயுதம் ஏந்தினார் . இதனால்தான் சே ஒரு மாமனிதராக அடையாளம் காணப்படுகிறார்.தனது மரணத்தைப்பற்றி கூறும் போதெல்லாம் சாவை கண்டு ஒருபோதும் பயப்பட போவதில்லை என்றும், ""நான் சாகடிக்க படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன் ""என்று கூறுவார். மார்க்சியவாதி ,மருத்துவர், இலக்கியவாதி ,புரட்சியாளர், யுந்த வல்லுனர் என பன்முகத் தன்மைகளை கொண்ட சேவின் பூதவுடல் அழிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவரது கொள்கைகளால் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டே இருப்பார். சேகுவேரா என்பது ஒரு பெயர் அல்ல. அது ஒரு வரலாற்று சரித்திரம். புத்தகம் பெயர் :சே குவேரா வேண்டும் விடுதலை ஆசிரியர்: மருதன் பக்கங்கள்:160 பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் விலை :190 #sheandherbooks #krishreads #readmorebooks #Readwithkrish #cheguevara #ernastocheguevara #communistbooks #tamilbooklovers #tamilbookrecommendations #tamilbookreviewer #readeveryday #read

12/3/2023, 4:20:10 AM

19)"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றுக்கு வலு சேர்க்கிறது எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவல். அதிக அறிமுகம் தேவைப்படாத தமிழின் மிகப்பெரிய ஒரு எழுத்தாளுமை ஜெயகாந்தன். வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை காட்டுவதில் சிறந்தவர்.இந்த மனிதரின் எழுத்துக்கள் ஏதோ ஒரு இடத்தில் தெரிந்தோ,தெரியாமலோ நம்மை கண்கலங்க வைத்து விடுகிறது. தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தது என்று ஜெயகாந்தனாலும்,இலக்கிய உலகில் ஆகச் சிறந்த படைப்பாகவும் இந்த நாவல் கருதப்படுகிறது. மனிதர்களாகிய நமக்குள்ளேயே இனம்,மொழி,நிறம்,சாதி எனப் பல வேறுபாடுகள் இருப்பதை காண்கிறோம். பல வேறுபாடுகள் இருப்பினும் மனிதர்களாகிய நாம் உணர்வுகளாலும்,மனித தன்மையாலும் ஒன்றுபட்டு நிற்கிறோம்.மனிதம் ஏதோ ஒரு இடத்தில் உயிரும் பெறுகிறது. ஊர்,பெற்றோர்,சாதி,இனம்,மொழி என்று எதுவும் தெரியாத ,ஒரு பொது மனிதனான ஹென்றியை முக்கிய கதாபாத்திரமாக்கிய,அவனது அனுபவங்களின் மூலம் வாழ்க்கை பற்றிய புரிதலை ஏற்படுத்துவதே இந்த நாவலின் பிரதான அம்சம். தோற்றத்தை வைத்து எதையும் நிதானிக்க கூடாது என்பதற்கேற்ப துரைக்கண்ணுவின் பேச்சு வம்புச் பேச்சாக இருப்பினும், அவரிடம் இருக்கும் பெருந்தன்மை வேறு மனிதர்களிடம் இருப்பது இல்லை என்பதை துரைக்கண்ணு கதாபாத்திரம் உணர்த்துகிறது. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்று வள்ளுவர் கூறியது போல விருந்தோம்பல் என்பது தமிழரின் தனிப்பண்பு.விருந்தாளிகளை அன்பாக கவனித்து வழியனுப்புவது தமிழர்களின் பண்பாடாகும்.இந்த சிறந்த பண்பினை அக்கம்மாள்,தேவராஜன் போன்ற கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. தங்களது ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் ஹென்றியின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு நல்ல மனிதனாக வளர்க்க விரும்பி, நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாக பப்பா-மம்மா கதாபாத்திரங்கள் திகழ்கிறது. கதையின் முக்கிய கதாபாத்திரமான ஹென்றி,ஒரு குழந்தையின் கண் பார்வையில் இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்குமோ அதுபோல ஹென்றியும் "காண்பதனைத்திலும் காதல் காண்பவன்".ஹென்றி போல உலகத்தை பார்க்க ஆரம்பித்தால் வாழ்க்கை மிக அழகாக இருக்கும் என்பது திண்ணம். ஒவ்வொரு புத்தகமும்,ஒவ்வொரு அனுபவம் என்பது போல பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட நபர்களை கதைமாந்தர்களாக்கி,அதன் மூலம் வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தி செல்கிறது ஜெயகாந்தனின் இந்த நாவல். #sheandherbooks #krishreads #Readwithkrish #readeveryday #tamilbooklovers #tamilbookrecommendations

11/23/2023, 9:49:12 AM

18)இன்றைய தமிழ் சமூகத்தில் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவிஞர்களில் முக்கியமானவர் சுகிர்தராணி.இவர் பெண்ணியம், தலித்தியம் ,சாதிய அடக்குமுறைகள்,பெண்ணுடலை மறுவாசிப்பு செய்தல் போன்ற சிந்தனைகளை உள்ளடக்கி கவிதை நூல்களை எழுதியுள்ளார். இப்படிக்கு ஏவாள் என்ற இந்த புத்தகம் இவரது ஆறாவது கவிதை தொகுப்பாகும்.இதில் 58 உள் தலைப்புகள் இடம்பெற்றுள்ளது. 🌟ஆதிநிலம் 🌟பல் பிடுங்கப்பட்ட வாழ்க்கை 🌟பற்படா யாக்கை 🌟நூற்றாண்டுகளின் ஒற்றைக் கேள்வி 🌟கொலையும் செய்வாள் பறச்சி 🌟பலியிடப்பட்ட காதல் 🌟முதுகின் மேலொரு சேரி 🌟கொலை பார்க்கும் நிலம் 🌟நான் அப்பாவின் மகள் 🌟வீடு திரும்புதல் போன்ற கவிதைகள் எனக்கு மிகவும் இந்த புத்தகத்தில் பிடித்திருந்தது. சுகிர்தராணியின் கவிதைகள் நவீன பெண்களின் விடுதலைக் குரல்களாகவே இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. #sheandherbooks #krishreads #bookrecommendations #tamilbooklovers #tamilbookreviewer #kavithaibooks #tamilbookstagram #bookishlove #meandbooks

11/13/2023, 1:29:56 PM

17)நீண்ட நாட்களாக நான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட புத்தகம் இது.படித்து முடித்ததும் ஒரு திரைப்படத்தை பார்த்தது போன்ற உணர்வைக் கொடுத்தது. அறத்தை முதன்மைப்படுத்தி கற்பனை கலந்து எழுதப்பட்ட வரலாற்று நாவல் தான் வேள்பாரி. 150 க்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் தமிழ் நிலப் பரப்பை ஆட்சி செய்து வந்தனர். மூவேந்தர்களின் வளர்ச்சியால் இனக்குழு சமுதாயம் சிதைய ஆரம்பித்தது . வேந்தனை மையமிட்ட மறுபங்கீட்டுச் சமூகம் உருவானது. இந்த அழித்தொழிக்கப்பட்ட இனக்குழுக்கள் சில பறம்பில் அடைக்கலம் அடைந்தனர்.பாரியின் கொடைத்தன்மையும், பறம்பு மலையின் இயற்கை வளமும் மூவேந்தரின் கண்ணை உறுத்தியது.பாரியின் சிறிய படை மீது,மூவேந்தரும் ஒன்று சேர்ந்து போர் தொடுத்தனர்.போரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நோக்கித்தான் நாவல் பயணிக்கிறது. இவ்வளவு அழகாக ஒரு நாவல் எழுதமுடியுமா?காதலையும் ,வீரத்தையும் சு.வெ விவரிக்கும் அழகே அழகு தான்.ஆரியமையப்படுத்தப்பட்ட முருகன் இல்லாமல், குறிஞ்சி நில தலைவனான முருகனுக்கும் ,நிலமகளான வள்ளிக்கும் இடையேயான காதல் கதையும்,பாரிக்கும் ஆதினிக்கும் இடையேயான காதலும் தான் இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி‌. கோவன் - செம்பா, சூலிவேள் - தூதுவை, நீலன் - மயிலா, உதிரன் - அங்கவை,அகுதை -அசுணமா என்று தனித்துவமான காதல் கதைகளும் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. பெண்ணுடைய அணுக்கத்தால் மலரும் ஏழிலைப்பாலை மரம்,ரத்தம் குடிக்கும் வவ்வால் இனத்தைச் சேர்ந்த காக்காவிரிச்சி பறவை, காதல் மரமான சந்தன வேங்கை மரம்,சோமபூண்டு பானம்,சுவையின் உச்சமான அறுபதாங்கோழி, கொற்றவைக்கூத்து ,தெய்வவாக்கு விலங்கு,கொல்லிக்காட்டு விதை, சுண்டா பூனை,தோகை நாய்கள்,ஆளி போன்ற உயிரினங்கள் பற்றியும், இயற்கையை பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. பொன்னியின் செல்வன் ,உடையார் போன்ற சோழப்பேரரசை மையமிட்டதாகவே வரலாற்று நாவல்கள் எழுதப்படுகிறது என்ற எனது ஆதங்கத்தை இப்புத்தகம் நீக்கியது.இந்த புத்தகத்தை முழுமையாக வாசித்து முடிக்கும் போது பாரியின் மீதும் ,பறம்பின் மீதும் ஒருவித காதலுணர்வு நிச்சயம் ஏற்படும். இப்படிப்பட்ட ஒரு நாவலை தமிழ் சமூகத்திற்கு அளித்த சு.வெங்கடேசன் அவர்களுக்கும், இந்த நாவலுக்கு ஏற்ப உயிரோட்டமான ஓவியங்களை வரைந்த மணியம் செல்வம் அவர்களுக்கும் எனது அன்புகளும் நன்றிகளும். புத்தகம் பெயர் : வேள்பாரி ஆசிரியர்:சு.வெங்கடேசன் பக்கங்கள்:1408 பதிப்பகம் : விகடன் பிரசுரம் விலை :1800 #sheandherbooks #bookreader #krishreads #tamilbooklovers #tamilbookloverstamilbookreaders #tamilbookstagram #velpaari #paarimanan

11/1/2023, 11:40:39 AM

15)பசி, உறக்கம் மாதிரி காமம் அப்படிங்குறதும் ஒரு உணர்வு தான்.இனக்குழு சமுதாயமாக இருந்தப்போ மனிதர்களுக்கு இருக்க மத்த உணர்வுகள் போல தான் காமத்தையும் பாத்தாங்க.இன்றைய நிலையில் காமம் என்ற வார்த்தையை கூட பொதுவெளியில உச்சரிக்க முடியல. எத பத்தி எல்லாம் ரொம்ப மறைத்து வைக்கிறோமோ அதை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கணும் அப்படிங்கிற ஆர்வம் அதிகரிக்கத் தான் செய்யும்.அது மனித இயல்பும் கூட. பல நேரங்களில் அது தெரிஞ்சுக்கணும் அப்படிங்கிற ஆர்வத்தைத் தாண்டி தவறா புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். காமமும் இப்படியானதது தான். காமம் அப்படிங்கறது இருபாலருக்கும் பொதுவானது தான். ஆனால் பெண்களுக்கு இதில் கட்டுப்பாடுகளும், சிக்கல்களும் அதிகம். காமம் பற்றி பேசினாலே அவள் தப்பான பொண்ணா தான் இருப்பா அப்படிங்கற ஒரு பிம்பம் இங்க இருக்கு .ஒரு குடும்பத்தோட மானம் ,கௌரவம் எல்லாத்தையும் கொண்டு போயி ஒரு பொண்ணோட கற்புக்குள்ள தான் வைக்கிறாங்க. கற்ப புனிதமாக்கி வைச்சுருக்காங்க. இந்த கட்டமைப்புகளை எல்லாம் உடைச்சு தான் இந்த புத்தகத்தை எழுத்தாளர் லதா அவர்கள் எழுதிருக்காங்க. மொத்தம் 32 அத்தியாயங்களில் காமம் பற்றிய விரிவான கருத்துக்கள் எழுதி இருக்காங்க. காதலுக்கும் காமத்துக்குமான வேறுபாடுகள், பாலியல் கல்வியோட தேவை /அவசியம் என சமூகத்துக்கு தேவையான முக்கியமான சிந்தனைகளைப் பற்றி ஆழமாக பேசியிருக்காங்க. பெண்களின் துவாரத்தில் விந்துவை கொட்டும் கழிவறை இருக்கையாகவே, ஆண்கள் பெண்களை உபயோகிக்கிறார்கள் என்பதை அடிக் கருவாக வைத்து கழிவறை இருக்கை புத்தகம் எழுதப்பட்டிருக்கு. நமக்கு வாழ்க்கை துணையாகவோ, இணையாகவோ வருபவர்களுக்கு இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்கி தரலாம். இங்க நம்ம சொல்ற கருத்தை மத்தவங்க ஏத்துக்கணும் அப்படிங்கிற எந்த அவசியமோ/ கட்டாயமோ இல்லை. நம்ம கொள்கைக்கு ஏற்புடையதை ,நமக்கு சரி அப்படின்னு தோணுறத மட்டும் ஏத்துக்கலாம். தமிழ்ச்சமூகத்தில் காமம் பற்றி விரிவாக பேசப்பட்டிருக்கும் இந்த கழிவறை இருக்கை புத்தகம் வாசிக்கப்பட வேண்டியது. புத்தகம் பெயர் : கழிவறை இருக்கை ஆசிரியர்: லதா பக்கங்கள்: 224 பதிப்பகம் : நோராப் இம்ப்ரிண்ட்ஸ் விலை :225 #sheandherbooks #krishreads #tamilbooklovers #ramilbook #tamilbookrecommendations #tamilbookreviewer #toiletseat #lovetolust #writerlatha #bookreader #bookandme #mustreadbook #bookreviews

10/6/2023, 11:45:50 AM

13)ஆணுருவமும் ,பெண்ணுருவமும் இணைந்து இருப்பதால் சிவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.இந்த அர்த்தநாரீஸ்வரருக்கு உரிய பெயர்களில் மாதொருபாகனும் ஒன்று. மாதொருபாகன் என்றால் ஆணும் பெண்ணும் இணைந்த வடிவம் என்று பொருள் படும். இந்த மாதொருபாகன் கோயில் அமைந்துள்ள திருச்செங்கோட்டை கதைக்களமாகக் கொண்டு கதை நகர்கிறது . பத்து வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லாத பொன்னா, காளி என்ற தம்பதியினரை இந்தச் சமூகம் எப்படி பார்க்கிறது? குழந்தை வேண்டி அவர்கள் செய்யும் வேண்டுதல்கள் ,குழந்தை இல்லாத இவர்களுக்கு சமூகம் தரும் வறடி, ஆண்மையில்லாதவன் என்னும் பட்டம் ,உறவினர்களின் வசைப்பேச்சுக்கு ஆளாகுதல், ஆகியவற்றைப் பற்றியே இந்த புத்தகம் பேசுகிறது. இன்றளவும் சமூகம் இப்படி ஆகத்தான் உள்ளது. திருமணமானதும் நல்ல செய்தி ஏதேனும் உண்டா? வீட்ல ஏதும் விசேஷமா ?நாங்க நல்லா இருக்கும்போதே பேரனையோ, பேத்தியோ பெற்று கொடு, இது மாதிரியான பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது .குழந்தை பேரு என்பது முழுக்க முழுக்க அந்த தம்பதியினரின் விருப்பம் சார்ந்தது. அவர்களின் முடிவே இறுதியானதும் கூட. ஆனால், சமூகம் யாரையும் அவரவர் விருப்பப்படி வாழ அனுமதிப்பதில்லை. காளிக்கும் பொன்னாவிற்கும் இதுதான் நேர்ந்தது. பத்து வருடங்களுக்கு மேலாக குழந்தை இல்லை என்பதைத் தாண்டி இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. சமூகத்தின் உந்துதலால் பொன்னா எடுக்கும் முடிவு தான் மாதொருபாகன் நாவல். " நீ சொன்னா போறேன்" என்ற இந்த வார்த்தையில் நிறைய வலிகளும், வேதனைகளும் அடங்கி உள்ளது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு கதை ஓட்டத்திற்காகவே இந்த புத்தகத்தை வாசிக்கலாம். புத்தகம் பெயர் : மாதொருபாகன் ஆசிரியர்: பெருமாள் முருகன் பக்கங்கள்: 192 பதிப்பகம் : காலச்சுவடு விலை :225 #sheandherbooks #krishreads #bookrecommendations #bookishlove #bookreviewer #tamilbooklovers #tamilbookreview #tamilbookstagram #perumalmurugan #madhorubagan #bookreader #readmorebooks #mustreadbook #Readwithkrish #readeveryday

9/21/2023, 2:09:19 PM

12)இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக உள்ள குழப்பத்திற்கு விடை கூறுவதற்கான ஒரு முயற்சி தான் இந்த புத்தகம்.இது ஒரு ஆய்வு நூலாகும். 1.ஆரியர்கள் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் தானா? 2.ஹரப்பா நாகரிகத்தவர்கள் யார்? 3.மரபியல் ரீதியாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்களா? 4.சாதி அமைப்பு முறை எப்போது தோன்றியது? இது போன்ற குழப்பமான,சிக்கலான கேள்விகளுக்கு விடை கூறுவது தான் இந்த புத்தகம். மரபியல் மொழியியல் ,தொல்லியல், கல்வெட்டியல் போன்ற துறை சார்ந்து தரவுகளை அளித்து கேள்விகளுக்கான விடையை கூறியிருப்பார். இந்தியர்களான நாம் அனைவருமே வந்தேறிகள் தான்‌.நாம் அனைவருமே கலப்பினத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்ற நடுநிலைத்தன்மையோடு நூலை நிறைவு செய்து இருக்கிறார்.மேலும் சிந்துவெளி நாகரிகம் திராவிடப் பண்பாடு தான் என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாகவும் இந்த புத்தகம் அமைகிறது. தொல் வரலாறு சார்ந்து தெரிந்து கொள்வதற்கு விருப்பமுள்ள அனைவருமே இந்த நூலை வாசிக்கலாம். அட்டைப்படத்தில் உள்ள படம் ஹரப்பா மொகஞ்சதாரோ நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை.இதற்கு Dancing girl என பெயர் சூட்டப்பட்டுள்ளது. #sheandherbooks #krishreads #tamilbooklovers #tamilbookrecommendations #tamilbookreviewer #earlyindians #tonyjoseph #bookreviewer #bookandme #indianorgin #mustreadbook #researchbooks

9/15/2023, 4:34:47 PM

11)நீண்ட நாட்களாக நான் படிக்க வேண்டும் என்று நினைத்த புத்தகம் இன்று படித்து முடித்தாயிற்று.பூனாச்சி என்பவள் அழகிய கருப்பு நிறத்தைக் கொண்ட ஒரு வெள்ளாட்டு குட்டி. இவளை மையமாக வைத்து சுற்றி நடக்கும் நிகழ்வுகள் மூலம் அரசாங்கம், சமூகம் போன்றவற்றை விமர்சித்தும் பெருமாள் முருகன் இந்த நாவலை எழுதியுள்ளார். மனிதராக இருந்தாலும், ஆடாக இருந்தாலும் காதல் என்ற உணர்வு எல்லோருக்கும் ஒன்றுதானே. பூனாச்சிக்கும் இப்படித்தான் .பூவன் என்ற ஆட்டுக்குட்டியை பூனாட்சி விரும்புவதும் இவர்களைப் பிரித்து, பூனாட்சியை ஒரு கிழட்டு ஆடுடன் காம இச்சைக்காக கூட விடும் இடங்கள் எல்லாம் நமக்கு கண்ணீரை வர வைக்கும் படியாக உள்ளது. பெண்களுக்கு நடக்கும் நிறைய அநீதிகளும் ,ஒடுக்கு முறைகளும் பூனாச்சிக்கும் நடக்கிறது. பூனாச்சி, பூவன் ,கடுவாயன் ,பீத்தன், உழுத்தன், ஊழையன், செம்மி,பொருமி என ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உரையாடல்களும் நம்மை ஆட்டு மந்தைக்குள்ளே பயணிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. விலங்குகள் சார்ந்து நான் படித்த முதல் புத்தகம் இதுதான். ஒரு வெள்ளாட்டின் வாழ்வியலை புனைவும், எதார்த்தமும் கலந்து மிக நேர்த்தியாக பெருமாள் முருகன் எழுதியுள்ளார்.மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் உணர்வுகளும், வாழ்க்கையும் உண்டு என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளார். புத்தகம் பெயர் : பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை ஆசிரியர்: பெருமாள் முருகன் பக்கங்கள்: 143 பதிப்பகம் : காலச்சுவடு விலை :180 #sheandherbooks #krishreads #bookishlove #perumalmurugan #poonachiorthestoryofablackgoat #poonachibookreview #bookreviewer #tamilbooklovers #tamilbookstagram #tamilbookreview #goatlife #perumalmuruganbook

9/9/2023, 1:00:00 PM

10)அறிஞர் அண்ணா அவர்களால் 1947 ஆம் ஆண்டு எழுதப்பட்டு திராவிட நாடு பத்திரிகையில் வெளிவந்த ஒரு நாடக நூலே நீதிதேவன் மயக்கம்.14 காட்சிகளில் நிறைய தொன்மக் கதைகளை உள்ளடக்கி இந்த நூலை எழுதியுள்ளார். வால்மீகி வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் திரித்து கம்பர் அதனை தமிழ்ப்படுத்தினார். ராவணனை இரக்கம் இல்லாதவனாக கம்பர் குற்றம் சாட்டியதை முன்வைத்தே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்கிட்டாலும் அதற்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். ராவணன் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைப்பதாகவே இந்த நூல் அமைந்துள்ளது. தேவர்கள் என்றாலே தர்மர்களாகவும் ,இரக்க குணம் கொண்டவர்களாகவும், அரக்கர்கள் எல்லோரும் அதர்மவாதிகளாகவும் இரக்ககுணம் அற்றவர்களாகவும் உள்ள ஒரு பிம்பத்தை அண்ணா அவர்கள் இந்நூலில் கட்டுடைத்துள்ளார். ராமன் ,ராவணன் இருவரையும் முன்வைத்து நடக்கும் அரசியலை தவிர்த்துவிட்டு அண்ணாவின் எழுத்து நடைக்காகவும், சொல்லாட்சிக்காகவுமே இந்த புத்தகத்தை அனைவரும் வாசிக்கலாம். புத்தகம் பெயர் : நீதி தேவன் மயக்கம் ஆசிரியர்: அறிஞர் அண்ணா பதிப்பகம் : எதிர் வெளியீடு விலை :114 #sheandherbooks #krishreads #bookishlove #tamilbooklovers #tamilbookstagram #tamilbook #tamilbookreviewer #tamilbookreview #needhidevanmayakkam #arigaranna #ravanan #bookme #writinglife #bookforlife #bookcover

9/5/2023, 7:30:21 AM

9)நின்காதல் நிழல் தன்னில் நின்று மகிழ்வோம், மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும் போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ..? என்ற இவான் துர்கேனேவின் கவிதையில் இருந்து தான் இந்த புத்தகம் தொடங்குகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த புத்தகத்தை படித்து இருந்தாலும்,மறுவாசிப்பு செய்யும் ஒவ்வொரு முறையும் அதே பிரியத்தையும் ,உணர்வையும் ஏற்படுத்துகிறது.மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள், நான்கு இரவுகள் இவற்றை மையமாக வைத்துக் கொண்டே உலகின் புகழ்பெற்ற காதல் கதையான வெண்ணிற இரவுகள் என்ற நூலை தஸ்தாயெவ்ஸ்கி எழுதியுள்ளார்.சிறுவயதிலிருந்தே நண்பர்கள் யாரும் இல்லாமல், தனிமையில் கற்பனை உலகத்தில் வாழக்கூடிய ஒருவனுக்கும் , பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து அன்பிற்காக ஏங்குகிற நாஸ்தென்கா என்ற பெண்ணுக்கும் இடையில் நடக்கும் நிகழ்ச்சிகள் , உரையாடல்கள்,காதல்,எதிர்ப்பார்ப்பு,பேரன்பு,துரோகம், எதார்த்தம் போன்றவையே இந்த புத்தகமாகும். காதல் என்ற போதையை ருசி சொட்ட சொட்ட இதற்கு முன் யாரும் இவ்வளவு அழகாக விவரித்திருப்பதாக நான் அறியவில்லை. புத்தகம் பெயர் : வெண்ணிற இரவுகள் ஆசிரியர்: ஃபியோதார் தஸ்தாயெவ்ஸ்கி தமிழில் :ரா.கிருஷ்ணையா பக்கங்கள்: 104 பதிப்பகம் : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் விலை :100 #sheandherbooks #krishreads #Readwithkrish #readmorebooks #tamilbooklovers #tamilbookreviewer #tamilbookstagram #vennirairavugal #tamilbookrecommendations #tamilbookreview #fyoderdostoevsky #lovestory #dostoevsky #feelgood #favouritebook

8/31/2023, 6:31:45 PM

8)வைக்கம் முகமது பஷீரால் மலையாளத்தில் எழுதப்பட்ட குறுநாவலே பால்யகால சகி. இதனை தமிழில் குளச்சல் யூசுஃப் என்பவர் மொழி பெயர்த்துள்ளார். இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது நம்முடைய பால்ய கால காதலும் ,நினைவுகளும் நிச்சயமாக நினைவிற்கு வரும். இந்த கதையின் ராஜகுமாரன் மஜீது, ராஜகுமாரி சுகறா ஆவாள்.இவர்களை மையமிட்டே கதை எழுதப்பட்டுள்ளது. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு 2014 இல் மம்முட்டி நடிப்பில் பால்யகால சகி என்ற மலையாளத் திரைப்படமும் வெளிவந்துள்ளது. வெண்ணிற இரவுகள் நூலைப் படித்த போது ஏற்பட்ட தாக்கம், இந்த புத்தகத்தை வாசிக்கும் போதும் எனக்குள் ஏற்பட்டது.வாழ்க்கை எவரையும் அவரவர் விருப்பப்படி வாழ அனுமதிப்பதில்லை.மஜுதுக்கும் சுகறாவுக்கும் இதுதான் நேர்ந்தது. உணர்வு பூர்வமான ஒரு புத்தகம். புத்தகம் பெயர் : பால்யகால சகி ஆசிரியர்: வைக்கம் முகமது பஷீர் பக்கங்கள்:80 பதிப்பகம் : காலச்சுவடு விலை :90 #sheandherbooks #krishreads #bookishlove #bookreview #bookme #bookstagram #bookreviewer #tamilbooklovers #tamilbookstagram #tamilbookrecommendations #tamilbookreaders #tamilbookreviewer #bookforlove

8/26/2023, 12:22:09 PM

7)இன்றுள்ள தமிழ்ச்சமூகம் சாதியத்திற்குள் சிக்குண்டு கிடக்கிறது. எங்கும் சாதிய வன்கொடுமைகளும், ஒடுக்குமுறைகளும் தீண்டாமைகளும் என சாதிப் பெருமையால் இந்த சமூகம் தனக்குள் தானே மோதிச் செத்துக்கொண்டுள்ளது. இதற்கு உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிறைய சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால், சங்ககால தமிழ்ச்சமூகம் இவ்வாறு இல்லை. மக்கள் தாங்கள் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப குறிஞ்சி ,முல்லை, மருதம் ,நெய்தல், பாலை என திணை அடிப்படையில் இனக்குழு சமுதாயமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இருந்த தமிழ்ச்சமூகம் சாதிய கட்டமைப்புக்குள் எவ்வாறு வந்தது, சாதியின் தொடக்கம் , சாதி எப்படியாக நிலைப்பெற்றது போன்றவற்றை பற்றியெல்லாம் பக்தவத்சல பாரதி இந்த குறுநூலில் எடுத்துரைக்கிறார். சாதியத்தை பற்றிய அடிப்படை புரிதலுக்காகவும் ,சாதிய கொடுமைகள்,சாதிய தீண்டாமை பற்றியெல்லாம் அக்கறை கொண்டவர்கள், இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்கலாம். புத்தகம் பெயர் : சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர் ஆசிரியர்: பக்தவத்சல பாரதி பக்கங்கள்: 72 பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் விலை :80 #tamilbookreviewer #krishreads #sheandherbooks #bookishlove #bookreview #bookreviews #tamilbookstagram #tamilbookreaders #bookme #bookandme #tamilbooklovers

8/22/2023, 12:07:01 PM

5)இந்த நூலானது மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் சரித்திர பின்னணியை கொண்ட நாவலாகும். இந்நூலின் ஆசிரியர் மனோஜ் குருர் என்பவர் ஆவார். தமிழில் இதனை கே.வி ஜெயஸ்ரீ என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.2019 ஆம் ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது இந்நூலுக்கு வழங்கப்பட்டது. சங்க காலத்தில் நடந்த நிகழ்வுகளை அழகான கற்பனையோடு கலந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்து மக்களான பாணர்கள், கூத்தர்கள், விறலியர்கள் போன்றோரும், சங்க காலத்து புலவர்களான பரணர், ஔவையார், கபிலர் போன்றவர்களும், சிறுகுடி தலைவர்களான பாரி ,அதியமான் நன்னன் என எல்லோரையும் கதை மாந்தர்களாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. வேள்பாரி நூலின் நீட்டிப்பாகவே இந்நூலை நான் கருதுகிறேன். மூவேந்தர்களின் கூட்டுச் சதியால் பாரி வீழ்த்தப்பட்டதையும் ,பாரியின் இறப்பிற்கு பிறகு பாரி மகளீரான அங்கவை, சங்கவை ஆகியோரது நிலையை பற்றியும் இந்நூலில் இவர் எழுதியுள்ளார். புறநானூற்றில் கூட (பா.எ.112) பாரியின் இறப்பிற்கு பிறகு தங்களது மன வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக ,பாரி மகளிர் பாடிய கையறு நிலை பாடல் ஒன்றுள்ளது. "அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின் எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்; இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின் வென்றுஎறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே" என்ற பாடல். இந்நூலை படித்து முடிக்கும் போது நிறைவான தமிழ் நாவலொன்றை வாசித்த உணர்வு நிச்சயம் கிடைக்கும். புத்தகம் பெயர் : நிலம் பூத்து மலர்ந்த நாள் ஆசிரியர்: மனோஜ் குரூர் பக்கங்கள்: 312 பதிப்பகம் : வம்சி புக்ஸ் விலை :300 #sheandherbooks #readmorebooks #Readwithkrish #krishreads #tamilbookreviewer #tamilbookstagram #tamilbookreaders #tamilbooksreview #sangailakkiyam #velpaari #angavaisangavai #paarimanan #soulfullread #bookishlove #bookandme #paduchacha #myfavoritebook #bookloversweek2023

8/13/2023, 7:12:32 AM

4)பௌத்தமே ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையே நடக்கும் போரின் தொடக்கம் என்ற கருதுகோளை முன்வைத்து இந்த நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர் எழில் இளங்கோவன். இது ஒரு சரித்திர ஆய்வு நூலாகும். ஆரியர்களின் வர்ண கோட்பாட்டை எதிர்த்து, சமூக முரண்பாடுப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக துறவு மேற்கொண்டார் புத்தர்.இவர் உருவாக்கிய அமைப்பு சங்கம் என்று அழைக்கப்படுகிறது. இதில் பெண்கள் ,ஒடுக்கப்பட்டோர் என அனைவருக்குமே துறவிற்கான உரிமை வழங்கப்பட்டிருந்தது. பௌத்தம் இரண்டு பெரும் பிரிவுகளை உடையது .ஒன்று தேரவாத பௌத்தம் மற்றொன்று மகாயான பௌத்தம். தேரவாத பௌத்தம் என்பது புத்தர் உருவாக்கிய கொள்கைகளை அப்படியே உள்வாங்கிக் கொண்ட திராவிட பௌத்தமாகும். மகாயான பௌத்தம் என்பது புத்தர் கூறிய கொள்கைகளில் இருந்து மாறுபட்டு , ஆரியத்தின் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்ட நாகர்ஜுனர் என்ற ஆரியரால் உருவாக்கப்பட்ட ஆரிய பௌத்தமாகும். இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தம் மகாயான பௌத்தமே என்கிறார் இந்நூலாசிரியர்.எனக்கு இது ஒரு புதிய செய்தியாக இருந்தது. அடிப்படையாக பௌத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக நான் வாசித்த சில நூல்கள்: 1.பௌத்தமும் தமிழும் -மயிலை .சீனி.வேங்கடசாமி 2.தர்மமும் சங்கமும் புத்தர் -அருணன் 3.பௌத்தமும் தம்மமும் -அம்பேத்கர் #sheandherbooks #krishreads #Readwithkrish #readmorebooks #tamilbookstagram #tamilbooksreview #tamilbookreaders #buddhism #philosophy #bookishlove #bookandme #buddah #buddhist #research #tamilbookreviewer

8/10/2023, 6:18:32 PM

3)ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமியின் முதல் நாவலாகும்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள புளியமரத்தை மையமாகக் கொண்டே நாவல் எழுதப்பட்டுள்ளது. புளிய மரத்தை குறியீடாக வைத்து அதனை சுற்றி இருக்கும் மக்கள், அவர்களின் வாழ்வியல், நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள், புளிய மரத்தைச் சுற்றி புளியக்குளம் எவ்வாறு உருவானது,புளியமரம் இறுதியில் என்ன ஆயிற்று? போன்றவற்றையெல்லாம் கிளைக் கதைகளாக எழுதியுள்ளார். கிளைக் கதைகள் அனைத்தும் முற்போக்குச் சிந்தனை, பெண்ணியச் சிந்தனை, இடதுசாரி சிந்தனை, வர்க்கப் பிரிவினை, நகரமயமாதல் போன்றவற்றைப் பேசுவதாக உள்ளது. நாவலில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் தாமோதர ஆசான். புளிய மரத்தைச் சுற்றிய கதைகளைச் சொல்லும் கதை சொல்லியாக இருப்பார். செல்லத்தாயி, அப்துல் காதர் ,தாமு ,ஐயப்பன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர். 50 வருட வரலாறு கொண்ட மரம் மனிதர்களின் பேராசையால் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதே இந்த நாவலின் மையக் கருத்தாகும். மனிதர்களைப் போல மரங்களுக்கும் வாழ்வு உண்டு என்ற கருத்தை இந்த நாவலின் மூலம் சுந்தர ராமசாமி வெளிப்படுத்தி உள்ளார். #sheandherbooks #krishreads #Readwithkrish #readmorebooks #sundararamaswamy #puliyamaram #goodbooks #bookreview #feelgood #review #bookme #bookstagram #bookishlove #padichacha #myfavoritebook #bookloversweek2023

8/9/2023, 5:28:26 AM

2)நாம் வாசிக்கும் புத்தகங்களில் சில புத்தகங்களே நமது மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். எனக்கு அப்படி ஒரு புத்தகம் தான் மாரி செல்வராஜனின் மறக்கவே நினைக்கிறேன் . பரியேறும் பெருமாள் திரைப்படம் பார்த்தபோது கிடைத்த கனத்த உணர்வு தான், இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போதும் எனக்கு ஏற்பட்டது. தனது வாழ்க்கையில் நடந்த இன்னல்கள், தான் செய்த தவறுகள், தனது அனுபவங்கள், தான் சந்தித்த மனிதர்கள்,தனக்கு ஏற்பட்ட காயங்கள், அவமானங்கள், தன்னால் பிறருக்கு ஏற்பட்ட வலிகள் என தான் மறக்க நினைக்கிற நிகழ்வுகளை எல்லாம் இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார். ஞாபகம் ஞாபகமாகவே இருந்து யாருக்கும் தெரியாமல் மூச்சுக்காற்றாக மாறி நுரையீரலுக்குள் போய் தங்கிவிட்டால் பரவாயில்லை, அது ஒரு இளையராஜா பாடலாக மாறி கண்ணுக்குத் தெரிவதைப் போல, காற்றில் மிதக்கும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறுகிறார். நா.மு சொல்வதைப் போல ,மாரி தான் மறக்க நினைத்ததை யெல்லாம் எழுதி வைத்துவிட்டு, வாசகன் அடிகோடிடுவதன் மூலம் மறக்க நினைத்ததையெல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்கிறார் போல. "நினைத்துத்தான் ஆக வேண்டும் நினைத்தால் தான் மறக்க முடியும் மறக்கத்தான் நினைக்கிறேன்" #sheandherbooks #maariselvaraj🖤 #bookreview #krishreads #bookstagram #instareading #heartwarming #perumalmurugan #Readwithkrish #bookstagrammer #readmorebooks #bookishfeatures #tamilbookreviewer #boookaddict

8/5/2023, 8:37:56 AM

1)🌟1976 - The Roots என்ற புத்தகம் அலெக்ஸ் ஹேலி என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. வேர்கள் என்ற தலைப்பில் தமிழிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் சுருக்கிய வடிவம் தான் ஏழு தலைமுறைகள் என்பதாகும். 🌟இந்தியாவில் சாதியத்தால் மக்கள் ஒடுக்கப்படுவது போல,மேலை நாடுகளில் நிறத்தால் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசக்கூடிய புத்தகமாக இது அமைந்துள்ளது. 🌟1756 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாட்டின் கேம்பியாவில் உள்ள ஜப்பூர் என்ற கிராமத்தில் இருக்கும் குண்ட்டா என்பவனிடம் இருந்தே கதை தொடங்குகிறது. ஆடு மாடுகளை ஏலத்தில் விற்பது போல,வெள்ளை முதலாளிகளுக்கு அடிமைத்தொழில் செய்வதற்கு கருப்பர்கள் விற்கப்படுகிறார்கள்‌. அதில் குண்ட்டாவும் ஒருவன். 🌟வயல்களில் வேலை செய்வது , சரியான உணவு ,தூக்கம் இல்லாமல் 16, 18 மணி நேரம் வேலை என்று வெள்ளை துரைமார்களால் கருப்பின மக்கள் துன்புறுத்தப்பட்டனர். அவர்களது உழைப்பும், வாழ்க்கையும் சுரண்டப்பட்டது. இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருப்பர்களின் வலி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது.ஏனென்றால் அது வலிநிறைந்தது. 🌟 பல தலைமுறைகளாக வெள்ளையர்கள் கருப்பினத்தவரை அடிமைப்படுத்தினர்.1863 ஆம் ஆண்டு ஆபிரகாம் லிங்கன் கொண்டு வந்த அடிமை முறை ஒழிப்பு என்ற சட்டத்திற்கு பிறகு இம்முறை சிறிது சிறிதாக மாறியது. 🌟கதையின் தொடக்கத்தில் கூறப்பட்ட கருப்பினத்தவரான குண்ட்டாவின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவரே இந்த புத்தகத்தை எழுதிய அலெக்ஸ் ஹேலி ஆவார். ஏழு தலைமுறைகளாக இவரது குடும்பம் அடிமைப்படுத்தப்பட்டதையும்,கருப்பர்களின் வலிகளை பற்றியும் ஆழமாக இப்புத்தகத்தில் எழுதியுள்ளார். #bookreview #bookstagram #alexhaley #theroots #bookme #sheandherbooks #krishreads

8/3/2023, 5:33:11 AM

புத்தக வாசிப்பு என்ற உலகத்தில் அதிகம் பயணித்தது என்பது கல்லூரி நாட்களில் தான். லாக்டவுன் சமயத்தில் ஏறத்தாழ எழுபது புத்தகங்கள் வாசித்திருந்தாலும் ,கடந்த ஆறு மாதங்களாக சில தனிப்பட்ட காரணங்களினால் தொடர்ந்து வாசிக்க முடியாமல் போனது. நான்கு நாட்களுக்கு முன்பு புத்தகத் திருவிழாவிற்கு சென்றபோது அங்குள்ள புத்தகங்களை பார்த்ததும், மீண்டும் தொடர் வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் தோன்றியது.அதில் ஒரு தொடக்கமாகவே இந்த @she_n_her_books பக்கமும். #bookfair #coimbatorebookfair2023 #sheandherbooks #Readwithkrish #bookreview #krishreads

7/31/2023, 2:46:40 PM

புத்தக வாசிப்பு என்ற உலகத்தில் அதிகம் பயணித்தது என்பது கல்லூரி நாட்களில் தான். லாக்டவுன் சமயத்தில் ஏறத்தாழ எழுபது புத்தகங்கள் வாசித்திருந்தாலும் ,கடந்த ஆறு மாதங்களாக சில தனிப்பட்ட காரணங்களினால் தொடர்ந்து வாசிக்க முடியாமல் போனது. நான்கு நாட்களுக்கு முன்பு புத்தகத் திருவிழாவிற்கு சென்றபோது அங்குள்ள புத்தகங்களை பார்த்ததும், மீண்டும் தொடர் வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் தோன்றியது.அதில் ஒரு தொடக்கமாகவே இந்த @she_n_her_books பக்கமும். #bookfair #coimbatorebookfair2023 #sheandherbooks #Readwithkrish #bookreview #krishreads

7/31/2023, 2:45:48 PM

Found a little nook inside our home. "Your prayer closet doesn't have to be a fancy built-on addition to your home; it can be any place where you will not be disturbed" -M.R. Swope #krishreads

10/22/2017, 7:53:22 AM